திங்கள், 7 செப்டம்பர், 2015





கடந்த இரண்டு வாரங்களில் வெளிவந்திருக்கும் திரைப்படங்களில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படங்கள் தனி ஒருவன் மற்றும் பாயும் புலி. இரண்டு படங்களுக்கும் உண்டான ஒற்றுமை: இரண்டு படங்களின் ஹீரோக்களும் போலிஸ் அதே போல இரண்டு படங்களின் வில்லன்களும் தன்னுடைய சுய லாபத்திற்க்காக பெற்ற அப்பாவையே கொல்ல துணிந்தவர்கள்.

ஏ.ஜி.எஸ் கல்பாத்தி.எஸ்.அகோரம் தயாரிப்பில், ஜெயம் ரவி, அரவிந்த் சாமி, நயன்தாரா முக்கிய பாத்திரங்களில் நடிக்க, ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் இசையில் எழுத்தாளர்கள் சுபா அவர்களின் வசன உதவியுடன், ஒளி இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவில், இதுவரை நேரடி தமிழ் படங்களை எடுத்திறாது மற்ற மொழி படங்களை மட்டுமே ரீமேக் செய்து வந்துள்ள ஜெயம் ராஜாவாய் அறியப்படும் இயக்குனர் மோகன் ராஜா முதன் முதலாய் தன்னுடைய சொந்த கதையுடன் களம் இறங்கியிருக்கும் படம் தனி ஒருவன். மித்ரன் ஐ.பி.எஸ்ஸாக வரும் ஜெயம் ரவி ஐ.பி.எஸ் பயிற்சியின் போதே தன்னுடன் பயிற்சி பெரும் நண்பர்களின் உதவியுடன் யாருக்கும் தெறியாமல் இரவுகளில் நடக்கும் குற்றங்களை தடுக்கிறார் அதோடல்லாமல் ஒவ்வொரு சிறு சிறு குற்றங்களுக்கும் பின்னனியாய் நிச்சயம் ஏதோ ஒரு பெரிய குற்றம் இருக்கும் என்பதை கனித்து, அந்த குற்றங்களின் பின்னனியை ஆராய்ந்து ஊரில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்குமே மூலமாய் திகழும் மூன்று நபர்களின் முழு விவரத்தையும் அறிந்து கொள்கிறார், பயிற்சி முடிந்து ஐ.பி.எஸ்ஸாய் பதவியேற்றதும் அந்த மூன்று பேரில் அதிகம் குற்றம் புரியும் ஒரு நபரை முதலாவதாக டார்கெட் செய்வதே அவருடைய நோக்கமாய் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அந்த மூன்று நபர்களையும் ஆட்டி வைப்பவர் தொழிலதிபர் சித்தார்த் அபிமன்யூவாக வரும் அரவிந்த் சாமிதான் என்பதை அறிந்து கொண்டு தன்னுடைய ஒரே டார்கெட் அவர் தான் என்ற முடிவுக்கு வருகிறார். ஐ.பி.எஸ் பயிற்சி முடிந்து பதவி ஏற்றதும் அரவிந்த் சாமியின் ஒவ்வொரு திட்டங்களையும் அறிந்து கொண்டு தடையாய் வந்து நிற்கிறார். ஜெயம் ரவிதான் தன்னுடைய திட்டங்கள் செயல்படாமல் போக காரணம் என்பதை தெறிந்து கொண்ட அரவிந்த் சாமி ஜெயம் ரவியின் உடம்பில் மருத்துவர்கள் உதவியுடன் ஒரு சிப்பை பொருத்தி விடுகிறார் இதன் மூலம் ஜெயம் ரவி தனக்கெதிராய் எடுத்து வைக்கும் ஒவ்வொறு அடியையும் இருந்த இடத்தில் தெரிந்து கொண்டு அதர்க்கெதிராய் காய் நகர்த்தி ஜெயம் ரவியின் ஒவ்வொரு திட்டத்தையும் தோல்வியடைய செய்கிறார். ஜெயம் ரவி தனக்குள் பொருத்தியிருக்கும் சிப்பை எவ்வாறு கண்டுப்பிடிக்கிறார் அரவிந்த் சாமியை எவ்வாறு வீழ்த்துகிறார் என்பதே விறு விறு க்ளைமாக்ஸ்.

ஜெயம் ரவியின் கேரியரில் இது மிக முக்கியமான படம் தன்னுடைய பாத்திர படைப்பை காட்டிலும் வில்லனின் பாத்திரம் வழுவானது என்பதை தெரிந்திருந்தும் மித்ரன் ஐ.பி.எஸ்ஸாகவே வாழ்ந்திருக்கிறார். நாயகியாக வரும் நயன்தாரா அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்திருக்கிறார். படத்தை முழுவதுமாக தாங்கி பிடிப்பவர் வில்லனாக வரும் அரவிந்த் சாமி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாவற்றுக்கும் அடி தடியில் இறங்காமல் ஒவ்வொரு காயையும் சாமர்த்தியமாக நகர்த்தும் மிகவும் ஸ்டைலிசான வில்லன் வேடம் அரவிந்த் சாமிக்கு மிகப்பொருத்தம். ஹிப் ஹாப் தமிழன் ஆதியின் இசையில் பாடல்கள் அந்தளவுக்கு படத்திற்க்கு ஈடு கொடுக்கவில்லை என்றாலும் பின்னனி இசை பரவாயில்லை எனும் ரகம். படத்தின் வேகத்திற்கு மிக முக்கிய பங்காக இருப்பது ஒளி இயக்குனர் ராம்ஜியின் ஒளிப்பதிவு. எழுத்தாளர்கள் சுபாவுடன் சேர்ந்து இயக்குனர் மோகன் ராஜாவும் வசனம் எழுதியிருக்கிறார் பல இடங்களில் வசனங்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஜெயம் ரவியின் சகலகலா வல்லவன் படத்தை பார்த்து வெந்து நொந்து நூடுல்ஸாய் போன நமக்கெல்லாம் கொஞ்சம் ஆறுதல் தந்திருக்கிறது இந்த படம்.

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விசால், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சூரி முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, டி.இமானின் இசையில், ஒளி இயக்குனர் வேல்ராஜின் ஒளிப்பதிவில், இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பாயும் புலி. மதுரையில் பணத்திற்காக தொழிலதிபர்கள் ஒவ்வொருவராய் கடத்தி கொல்லப்பட கொலையாளிகளை பிடிக்கும் முயர்ச்சியில் ஒரு காவலர் இறந்து விடுகிறார். திருச்சியில் இருந்து மதுரைக்கு மாறுதலாகி வரும் அசிஸ்டெண்ட் கமிஸ்னர் ஜெய சீலனாக விஷால் பதவியேற்க பதினைந்து நாட்களுக்கு முன்னதாகவே மதுரை வந்து கடத்தல் காரர்கள் அனைவரையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூண்டோடு அழிக்கிறார். எல்லாம் முடிந்து விட்டதாய் நினைக்கும் நேரத்திலும் அடுத்தடுத்து அதே முறையில் கொலைகள் தொடரவே இதற்கு பின்னனியில் வேரொருவர் இருக்கிறார் என்பதை புரிந்து கொண்ட விஷால் அவரை தேடும் முயர்சியில் இறங்குகிறார். அனைத்து கடத்தல் மற்றும் கொலைகளுக்கும் காரணம் விஷாலின் சொந்த அண்ணனாக வரும் இயக்குனர் சமுத்திரக்கனி என்பதை விஷால் எவ்வாறு கண்டுப்பிடிக்கிறார் என்பதை  சஸ்பென்ஸ் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்தரன்.


ஏ.சி ஜெயசீலனாக வரும் விஷால் அவருடைய உயரத்திற்கேற்ப போலிஸ் பாத்திரத்தில் சரியாய் பொருந்தியிருக்கிறார். நாயகி காஜல் அகர்வாலுக்கு படத்தில் விஷாலை காதலிப்பதை தவிர வேரு வேலை எதுவும் கொடுக்கப்படவில்லை. வில்லனாக வரும் சமுத்திரக்கனிக்கு விஷாலுக்கு அடுத்தப்படியான முக்கிய கதாப்பாத்திரம் அதையும் சிறப்பாகவே செய்திருக்கிறார். காமெடியனாக சூரி சகலகலா வல்லவனுக்கு பிறகு இதிலும் எரிச்சல் ஊட்டுகிறார், இமானின் இசையில் முயல் குட்டி பாடலும் சிலுக்கு மரம் பாடலும் பரவாயில்லை. சுசீந்தரன் இந்த படத்தை இயக்குனர் ஹரியை மனதில் வைத்து இயக்கியிருப்பார் போல அவருடைய ஃபார்முலாக்கள் அங்கங்கே கொட்டிக்கிடக்கிறது. ஒரு முறை பார்க்கலாம் எனும் சுமார் வட்டத்திற்குள் அடைந்துவிட்டது பாயும் புலி.