புதன், 28 அக்டோபர், 2015

ரஷோமான் விளைவு



ஒரு நிகழ்வை அந்த நிகழ்வில் தொடர்புடைய வெவ்வேறு நபர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு முரண்பட்டு விவரிப்பதே ரஷோமான் விளைவு எனப்படுகிறது. இப்படி ஒரு சொற்றொடர் உருவானதற்கு பின்னனியில் இருப்பது புகழ்பெற்ற ஜப்பானிய இயக்குனர் அகிரா குரசோவா இயக்கிய 'ரஷோமான்' என்ற திரைப்படம் என்பது வியப்பான செய்தி. ஒரு கொலையைப்பற்றி அந்த கொலைக்கு சாட்சிகளாய் இருக்கக்கூடிய நான்கு நபர்கள் அவர்களுக்கு ஏற்றவாறு திரித்து விவரிப்பதே ரஷோமான் படத்தின் கதை. 1950ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தின் திரைக்கதை நேரியல் அல்லாத (Non Linear) என்று சொல்லப்படுகிற திரைக்கதை வடிவமைப்பை கொண்டு உருவாக்கப்பட்டது, சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான ஆஸ்கார் விருதையும், வெனிஸ் பட விழாவில் தங்கச்சிங்கம் விருதையும் பெற்று இன்றும் இது போன்ற திரைக்கதைகளுக்கு முன்னோடியாய் இருக்கும் இந்த திரைப்படம் ஜப்பானிய மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. குதிரையில் காட்டை கடந்து கொண்டிருக்கும் ஒரு வீரனையும் அவனது மனைவியையும் மரத்தடியில் ஓய்வெடுத்து கொண்டிருக்கும் ஒரு திருடன் பார்த்துவிடுகிறான். வீரனின் மனைவியின் அழகில் மயங்கிய திருடன் அவளை எப்படியாவது அடையும் முயற்சியில் வீரனை ஏமாற்றி கயிற்றில் கட்டிவிட்டு அவனது மனைவியை கற்பழித்துவிடுகிறான் பின் அந்த வீரனும் கத்தியால் குத்தப்பட்டு இறந்து போகிறான். அந்த வீரனின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதை நிகழ்வை நேரில் பார்த்த ஒரு விறகு வெட்டி, குற்றம் சாட்டப்பட்ட அந்த திருடன், கற்பழிக்கப்பட்ட மனைவி மற்றும் இறந்துபோன வீரனின் ஆவி ஆகிய நால்வரும் சாட்சிகளாக வெவ்வேறு விதமாக விவரிக்க இறுதியில் உண்மை எது என்பதை விறகுவெட்டியின் மூலமாக நமக்கு தெரியப்படுத்துவதாக முடிகிறது.



ரஷோமான் விளைவை பின்பற்றி தமிழில் திரைக்கதை அமைக்கப்பட்ட முக்கியமான இரண்டு திரைப்படங்கள் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் 1954ம் ஆண்டு வெளியான "அந்த நாள்" மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்து 2001ம் ஆண்டு வெளியான "விருமாண்டி". சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் உறுவான அந்த நாள் திரைப்படத்தில் படம் ஆரம்பிக்கப்பட்ட சில நிமடங்களிலேயே நாயகன் சிவாஜி கணேசன் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விடுவார் பின் மீதிப்படம் முழுக்க கொலை செய்தது யார் கொலைக்கான காரணம் என்ன என்பதை விசாரிப்பதாக செல்கிறது கதை. விசாரிக்கப்படும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவரிப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இறுதியில் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிப்பதுடன் முடிகிறது. இந்த திரைப்படம் முழுமையுமே ரஷோமான் பாதிப்பில் உறுவானவை என்பது தெளிவாக தெரிகிறது. அடுத்த படமான உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடித்த விருமாண்டி திரைப்படத்தில் அபிராமியின் மரணத்திற்கு காரணமான நிகழ்வை பசுபதியும் கமலும் முரண்பட்டு விவரிப்பது ராஷோமான் விளைவின் யுத்தியே ஆனாலும் அந்த நாள் திரைக்கதையை போல முழுக்கவும் ராஷோமான் விளைவை சார்ந்ததாக இத்திரைப்படம் இல்லாதது நிச்சயம் உலக நாயகனின் புத்திசாலித்தனத்தால் நடந்ததாகவே இருக்க வேண்டும்.

வெள்ளி, 9 அக்டோபர், 2015

சேவின் பொலிவிய யுத்தம்


கியூபாவை கைப்பற்ற பிடெல் காஸ்ட்ரோவிற்கு பேருதவி புரிந்து பின் சில காலம் அவரது அமைச்சரவையில் சில முக்கிய பதவிகள் வகித்தும் அதையெல்லாம் வெறுத்து மீண்டும் யுத்தகளம் மட்டுமே செல்ல ஆவல் கொண்டிருந்த சே குவேரா அடுத்து செல்ல முடிவெடுத்திருந்த நாடு காங்கோ. தன் பதவி மற்றும் கியுபா குடியுரிமையை உதறிவிட்டு காஸ்ட்ரோவிற்கு மட்டும் ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் கியூபாவை விட்டு வெளியேறினார் சே குவேரா. 1965ம் ஆண்டில் காங்கோவில் தன் கொரில்லா பயிற்சியை தொடங்கிய சே குவேரா தான் பயிற்சி கொடுத்த வீரர்களிடம் புரட்சியில் ஆர்வம் இல்லாததை உணர்ந்து காங்கோவில் இருந்து வெளியேற முடிவு செய்தார், பின்னர் அவர் செல்வதற்கு முடிவு செய்திருந்த இடம் பொலிவியா. பொலிவியாவை ராணுவ புரட்சியால் வென்று விட்டால் சுற்றி இருக்கும் ஐந்து நாடுகளையும் ராணுவ புரட்சி மூலம் எளிதாக வென்று விடலாம் என்று உணர்ந்த படியால் பொலிவியாவை தேர்ந்தெடுத்தார் சே குவேரா.


நவம்பர் 1966 இல், சே குவேரா அடொல்ப் மேனா கோன்சாலாஸ் என்ற பெயரில் நடுத்தர வயது உருகுவே தொழிலதிபர் போல மாறுவேடமிட்டு பொலிவியா வந்திரங்கினார். வந்த வேகத்திலேயே தன் வேடத்தை களைந்து பொலிவியாவில் கொரில்லா பயிற்சியை ஆரம்பித்தார். சே குவேராவின் படையில் பெரும்பான்மையான வீரர்கள் கியூபா மற்றும் பெருவை சார்ந்தவர்களாகவே இருந்தனர், போலியாவை சார்ந்தவர்களை தன் படையில் விரைவாக சேர்க்க முடியும் என்று நம்பியிருந்தார் ஆனால் துரதிருஷ்டவசமாக சே குவேராவால அதை செய்ய முடியவில்லை.

சே குவேரா முதலாவதாக பெரியதாக நம்பியிருந்த பொலிவியாவின் இடது சாரிகள் தங்களின் தலைமையில் புரட்சி செய்வதானால் மட்டுமே சே குவேராவுக்கு உதவுவதாக தெரிவிக்க அதை சே குவேரா ஏற்க மறுத்த காரணத்தினால் பொலிவிய இடதுசாரிகளும் சே குவேராவிற்கு உதவி செய்ய மறுத்தனர்.

சே குவேராவின் இரண்டாவது நம்பிக்கையாய் இருந்தவர்கள் பொலிவிய விவசாயிகள் கியூப போரின் போது கியூபாவின் விவசாயிகளின் உதவியால் வீரர்களுக்கு உணவு கிடைத்த படியால் அதே நிலையை பொலிவியாவிலும் உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால்  பொலிவிய விவசாயிகளோ வெளிநாட்டவரான சே குவேராவை நம்ப தயாராக இல்லாத காரணத்தினால் அவர்களும் உதவ மறுத்தனர்.

இப்படி எல்லாமே சே குவேராவுக்கு எதிராய் திரும்பியிருந்த அவ்வேளையில் பொலிவிய அரசாங்கம் சே குவேராவின் இருப்பையும் அவரின் இருப்பிடத்தையும் அமெரிக்காவின் உளவமைப்பான சி.. மூலம் அறிந்து கொண்டு 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிவிய ராணுவம் நடத்தியது. தாக்குதலில் சேவின் படை முற்றிலுமாக சிதறுண்டு போனது ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர். கடுமையான ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்படிருந்த சே குவேரா 16 பேர் அடங்கிய அவரது சிறிய படையை வைத்து கொண்டு மேற்கொண்டு முன்னேற முடியாமல் சிக்கியிருந்தார்.

இறுதியில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி காலை பொலிவிய ராணுவம் ஒரு கனவாய் வழியாக சென்று கொண்டிருந்த  சே குவேராவின் படையை சுற்றி வளைத்தனர், மதியம் 1.10 மணியளவில் பெரும் துப்பாக்கி சண்டை வெடித்தது. கொரிலாக்கள்  பலரும் கொல்லப்பட்டனர் மிஞ்சியவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சண்டையில் ஒரு தோட்டா சே குவேராவின் இடது காலை தாக்கவே அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் போனது. சே குவேராவை கைது செய்த பொலிவிய ராணுவம் அவரை அந்த நகரத்திலுள்ள ஒரு பழைய பள்ளியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறை வைத்தது. மறுநாள் சே குவேராவை கொல்வதற்கு பொலிவிய அதிபரிடமிருந்து உத்தரவு வரவே அக்டோபர் 9, 1967 அன்று 1:10 மணிக்கு சே குவேரா துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.



சாதாரண போராளியாய் இருந்த ஒரு மாபெரும் மனிதனின் பெயர் வரலாற்றில் இடம்பெற காரணமாக அமைந்த தினம் இன்று...