திங்கள், 29 ஜூலை, 2019

ஆதலினால் காதல் தவீர்



இயல்பாய் இருக்க முடிகிறதா உன்னால்???

சிரிக்க மறந்ததுண்டா நீ???

மார் அடைப்பு இல்லாமல் இதயவலி உணர்ந்ததுண்டா???

உறக்கம் கெடுக்கும் கனவுகள் வந்ததுண்டா???

காயம் தரும் காத்திருப்புகளுக்கு நேர விரயம் செய்ய தயாரா???

இந்த உலகையே வெறுக்கும் நிலைக்கு வந்ததுண்டா???

தனியேப்பேசி தன்னிலை மறக்கும்
பித்தநிலை அடைந்ததுண்டா???

இரவு பகலாய் பகலோ இரவாய் குழப்பும் மாற்றம் கண்டதுண்டா???

தண்ணீரின்றி வறண்ட பூமியாய்
கண்ணீரின்றி கண்கள் வேண்டுமா???

பிரிவின் வலி மிகவும் கொடிது
அனுபவித்து பார்க்கும் ஆவலுண்டா???

நீச்சல் தெரியாமல் கிணற்றின் ஆழம்
குதித்து அறியும் சாகசம் தேவையா???

அலைப்பேசி அனல்பேசியாக
அப்புறம் அப்புறமென அநாவசிய பேச்சுக்கள் அவசியந்தானா???

பட்டாம்பூச்சி பறக்கும் திசையெல்லாம் பார்த்து ரசிக்கும் நேரமிருக்கிறதா???

வரமாய் தோன்றும் சாபம் காதல்...
சொர்க்கத்திலும் நரகம் காதல்...
அமிர்தில் கலந்த ஆலகாலம்...
பரந்தவெளியில் குறுகிய வட்டம்...

காதல் போதையில்...
அண்ணாந்து பார்த்தால் பூமி
குனிந்து பார்த்தால் வானம்
தலைகீழாய் நீ...!

ஆதலினால் காதல் தவீர்...!

ஞாயிறு, 12 மே, 2019


கோணல் முக நாயைக் கண்டாலே
துறத்தி விடுகின்றன, தெரு நாய்கள்.
அதன் சந்தை மதிப்பு தெரியாமல்...!

குரைக்கிற நாய் கடிக்காதென்பதை
கேட்டாலே
உணர்ச்சிவசப்படுகிறாள்
வெறிநாய்க்கடியால் இறந்தவனின் மனைவி...!

காதலியோடு அவள் வீட்டின்
நாயையும் வசப்படுத்த வேண்டி
பிஸ்கெட் பாக்கெட்டுகள்
விற்பனையாகின்றன
சில்லரைக்கடைகளில்...!

ஆட்டிரச்சியுடன் நாய்கறியும்
சேர்க்கப்படுவதாக செய்திகள் பரவ
தேடப்பட்டன தொலைந்துப்போன
தெரு நாய்கள்...!

திருடிச்சேர்த்த பொருளை பதுக்க
காட்டு பங்களாவுடன்
வேட்டை நாய்கள்
வாங்குவதும் அவசியமாகிறது
அரசியல்வாதிகளுக்கு...!

புயல் வெள்ளத்தால்
ஊரே மூழ்கி கிடக்க
தன்னைக்கடித்த நாய்க்கு
எதுவும் ஆகிவிட கூடாதென்று
வேண்டிகொள்கிறான்
தடுப்பூசி போட காசில்லாதவன்...!

செல்லக்குட்டியென நாயை
கொஞ்சும் ஒருத்தி,
தன் மகனை நாயே எனத்திட்ட
விழுந்தடித்து வெளியே ஓடியது
அவள் வீட்டு நாய்...!

புது கார் வாங்கி
கோவில் செல்லும் முன்னமே
கால்தூக்கி அபிஷேகம்
செய்தது
டயருகுக்கு பழகிய நாயொன்று...!

மின்சார கம்பிகள்
பூமிக்குள் புதையுண்டு
மின் கம்பங்களெல்லாம்
அகற்றப்பட்ட பின்,
தன் கழிவிடங்களைத்தேடி
அலைகின்றன
நகரத்து நாய்கள்...!

பிச்சைக்காரி போட்ட
ஒரு துண்டு ரொட்டிக்காக
அவளுடன் சுற்றிய
தெரு நாய் ஒன்று,
முந்தைய இரவில் - அவளை
புணர்ந்து கொன்றவனை
துரத்தி குறைப்பதை,
காவல் துறையுடன் வந்த
மோப்ப நாயாவது புரிந்துகொள்ளுமா???