கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 அக்டோபர், 2015

சேவின் பொலிவிய யுத்தம்


கியூபாவை கைப்பற்ற பிடெல் காஸ்ட்ரோவிற்கு பேருதவி புரிந்து பின் சில காலம் அவரது அமைச்சரவையில் சில முக்கிய பதவிகள் வகித்தும் அதையெல்லாம் வெறுத்து மீண்டும் யுத்தகளம் மட்டுமே செல்ல ஆவல் கொண்டிருந்த சே குவேரா அடுத்து செல்ல முடிவெடுத்திருந்த நாடு காங்கோ. தன் பதவி மற்றும் கியுபா குடியுரிமையை உதறிவிட்டு காஸ்ட்ரோவிற்கு மட்டும் ஒரு கடிதத்தை அனுப்பி விட்டு யாருக்கும் தெரியாமல் கியூபாவை விட்டு வெளியேறினார் சே குவேரா. 1965ம் ஆண்டில் காங்கோவில் தன் கொரில்லா பயிற்சியை தொடங்கிய சே குவேரா தான் பயிற்சி கொடுத்த வீரர்களிடம் புரட்சியில் ஆர்வம் இல்லாததை உணர்ந்து காங்கோவில் இருந்து வெளியேற முடிவு செய்தார், பின்னர் அவர் செல்வதற்கு முடிவு செய்திருந்த இடம் பொலிவியா. பொலிவியாவை ராணுவ புரட்சியால் வென்று விட்டால் சுற்றி இருக்கும் ஐந்து நாடுகளையும் ராணுவ புரட்சி மூலம் எளிதாக வென்று விடலாம் என்று உணர்ந்த படியால் பொலிவியாவை தேர்ந்தெடுத்தார் சே குவேரா.


நவம்பர் 1966 இல், சே குவேரா அடொல்ப் மேனா கோன்சாலாஸ் என்ற பெயரில் நடுத்தர வயது உருகுவே தொழிலதிபர் போல மாறுவேடமிட்டு பொலிவியா வந்திரங்கினார். வந்த வேகத்திலேயே தன் வேடத்தை களைந்து பொலிவியாவில் கொரில்லா பயிற்சியை ஆரம்பித்தார். சே குவேராவின் படையில் பெரும்பான்மையான வீரர்கள் கியூபா மற்றும் பெருவை சார்ந்தவர்களாகவே இருந்தனர், போலியாவை சார்ந்தவர்களை தன் படையில் விரைவாக சேர்க்க முடியும் என்று நம்பியிருந்தார் ஆனால் துரதிருஷ்டவசமாக சே குவேராவால அதை செய்ய முடியவில்லை.

சே குவேரா முதலாவதாக பெரியதாக நம்பியிருந்த பொலிவியாவின் இடது சாரிகள் தங்களின் தலைமையில் புரட்சி செய்வதானால் மட்டுமே சே குவேராவுக்கு உதவுவதாக தெரிவிக்க அதை சே குவேரா ஏற்க மறுத்த காரணத்தினால் பொலிவிய இடதுசாரிகளும் சே குவேராவிற்கு உதவி செய்ய மறுத்தனர்.

சே குவேராவின் இரண்டாவது நம்பிக்கையாய் இருந்தவர்கள் பொலிவிய விவசாயிகள் கியூப போரின் போது கியூபாவின் விவசாயிகளின் உதவியால் வீரர்களுக்கு உணவு கிடைத்த படியால் அதே நிலையை பொலிவியாவிலும் உருவாக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால்  பொலிவிய விவசாயிகளோ வெளிநாட்டவரான சே குவேராவை நம்ப தயாராக இல்லாத காரணத்தினால் அவர்களும் உதவ மறுத்தனர்.

இப்படி எல்லாமே சே குவேராவுக்கு எதிராய் திரும்பியிருந்த அவ்வேளையில் பொலிவிய அரசாங்கம் சே குவேராவின் இருப்பையும் அவரின் இருப்பிடத்தையும் அமெரிக்காவின் உளவமைப்பான சி.. மூலம் அறிந்து கொண்டு 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிவிய ராணுவம் நடத்தியது. தாக்குதலில் சேவின் படை முற்றிலுமாக சிதறுண்டு போனது ஏராளமான வீரர்களும் கொல்லப்பட்டனர். கடுமையான ஆஸ்துமா பிரச்சனையால் பாதிக்கப்படிருந்த சே குவேரா 16 பேர் அடங்கிய அவரது சிறிய படையை வைத்து கொண்டு மேற்கொண்டு முன்னேற முடியாமல் சிக்கியிருந்தார்.

இறுதியில் 1967ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி காலை பொலிவிய ராணுவம் ஒரு கனவாய் வழியாக சென்று கொண்டிருந்த  சே குவேராவின் படையை சுற்றி வளைத்தனர், மதியம் 1.10 மணியளவில் பெரும் துப்பாக்கி சண்டை வெடித்தது. கொரிலாக்கள்  பலரும் கொல்லப்பட்டனர் மிஞ்சியவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சண்டையில் ஒரு தோட்டா சே குவேராவின் இடது காலை தாக்கவே அவரால் மேற்கொண்டு ஓட முடியாமல் போனது. சே குவேராவை கைது செய்த பொலிவிய ராணுவம் அவரை அந்த நகரத்திலுள்ள ஒரு பழைய பள்ளியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சிறை வைத்தது. மறுநாள் சே குவேராவை கொல்வதற்கு பொலிவிய அதிபரிடமிருந்து உத்தரவு வரவே அக்டோபர் 9, 1967 அன்று 1:10 மணிக்கு சே குவேரா துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.



சாதாரண போராளியாய் இருந்த ஒரு மாபெரும் மனிதனின் பெயர் வரலாற்றில் இடம்பெற காரணமாக அமைந்த தினம் இன்று...

வியாழன், 13 ஆகஸ்ட், 2015




கடந்த மூன்று நாட்களாகவே வலைதளங்களிலும், செய்தி ஒளியலை வரிசைகளிலும் சுந்தர் பிச்சை என்ற பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் எல்லாம் இவரின் புகைப்படத்துடன் "இந்தியனாய் பிறந்ததில் பெருமை" என்ற வாசங்களோடு பல பதிவுகள் உலாவுவதை காணமுடிகிறது. நம் இந்திய பிரதமரே வாழ்த்துக்கள் சொல்லும் இந்த சுந்தர் பிச்சை யார்? நாம் பெருமை கொள்ளும் அளவுக்கு நம் தேசத்திற்கு அவர் என்ன செய்து விட்டார்??

ஆகஸ்ட் 10 2015 அன்று இந்தியரான(தமிழரான) சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கூகுள் என்பது மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஒரு இந்தியர் அதுவும் தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது நிச்சயம் நமக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விசயம் தான் என்றாலும் நம் சென்னையில் பிறந்திருந்தாலும் ஒரு அமெரிக்க குடிமகனாகவே வாழ்ந்து வரும் இவரை இந்தியாவே தலையில் தூக்கி வைத்து கொண்டாடுமளவுக்கு இவர் நம் தேசத்துக்காக எதையும் இதுவரை செய்திடவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு 2014 இல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்யா நாடெல்லா நியமிக்கப்பட்ட போதும் இதே ஆர்ப்பாட்டம் தான்.

இது சுந்தர் பிச்சையின் தவறோ அல்லது சத்யா நாடேல்லாவின் தவறோ இல்லை நம் அரசாங்கத்திடமும் அதிகாரிகளிடத்தும் இருக்கிற பிழை. நம் அப்துல் கலாம் அய்யா அவர்கள் நம் இந்தியாவிலையே வெற்றி பெற்ற அளவுக்கு மற்ற திறமைசாலிகளுக்கும் வாய்ப்புகள் அமைவது என்பது நம்முடைய நாட்டில் குதிரை கொம்பு தான். 2009 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்(சிதம்பரத்தில் பிறந்தவர்) அவர்களும் "நான் இந்த தேசத்தில் பிறந்தேன் என்பது வெறும் விபத்து தான் அதில் பெருமைப்பட எதுவும் இல்லை நாமெல்லாம் மனிதர்கள்" என்று கூறியிருக்கிறார்.

மின்னஞ்சலை கண்டுபிடித்த சிவா அய்யாதுரை அவர்களோ "2008 இல் இந்திய அரசின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்து அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்' (CSIR) என்ற அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வந்தேன்மூன்று மாதங்கள் இந்தியாவில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட இந்திய விஞ்ஞானிகளைச் சந்தித்து ஆய்வறிக்கை ஒன்றைத் தயார் செய்தேன். இங்கே அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய சூழ்நிலை நிலவவில்லை என்பதை அறிந்தேன். இங்குள்ள விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தும் திறனுடையவர்கள் என்றாலும் அதற்குத் தடையாகப் பல விஷயங்கள் உள்ளன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவில் எந்த உருப்படியான கண்டுபிடிப்புகளும் இல்லாமல் இருப்பதற்கு இந்த அமைப்பின் மேலிருந்து அமுக்குபவர்களே காரணம் என்று சொன்னேன். இது இந்தியாவில் உள்ளவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அமெரிக்காவுக்குத் திரும்பிவிட்டேன்'' என்கிறார்.


இந்தியர்களாய் பிறந்து புலம் பெயர்ந்து சாதித்தவர்களின் பட்டியல் மிக நீளம் வருங்காலங்களில் அது இன்னும் நீளும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் புறநானூறு பாடல் வரிகளை வைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியது மட்டும் தான் நம்மால் முடிவது...